அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய சங்காபிஷேகம் இனிதே நிறைவுற்றது.
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயத்தில் 12.08.2015 புதன்கிழமை அன்று 1008 சங்குகளாலான சங்காபிஷேக நிகழ்வு மிகவும் விமர்சையாக நடைபெற்றது. காலை 8:30 மணியளவில் கிரியைகள் ஆரம்பமாகியது. கலச அமைப்பில் அழகாகவும், நேர்த்தியாகவும் சங்குகள் அடுக்கப்பட்டிருந்த காட்சி அடியவர்கள் மனங்களை பக்திப்பரவசத்தில் ஆழ்த்தியது. புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது.
1008 சங்குகளையும் அடியவர்கள் வரிசைகிரமமாக நின்று இறைவனுக்கு அபிஷேகத்திற்கு வழங்கிய காட்சி மெய்சிலிர்க்க வைத்தது. அபிஷேகத்தினை தொடர்ந்து எம்பெருமானுக்கு விஷேடே பூஜைகள் நடைபெற்றது. அதன்பின்னர் சுமார் மதியம் 2 மணியளவில் கும்பாபிஷேக சிறப்புமலர் வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது இந்நிகழ்வில் சோமஸ்கந்தராஜக்குருக்கள் அவர்கள், கலாச்சார உத்தியோகத்தர், கார்த்திகேயன், கலாநிதி நிர்மலா நல்லையா மற்றும் புலத்தில் வாழும் அடியவர்கள், புலம்பெயர்ந்து வாழும் அடியவர்கள் என பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர். குறுகிய நேரத்தில் மிகவும் சிறப்பான முறையில் மலர் வெளியீட்டு நிகழ்வு நிறைவுற்ற பின்னர் அடியவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதன் பின்னர் மாலை 6 மணியளவில் வசந்த மண்டப பூஜை இடம்பெற்று எம்பெருமான் உள்வீதி வலம் வந்து மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பறத்தில் நாதஸ்வர வாத்தியங்கள் முழங்க அடியவர்களின் அரோகரா கோஷத்துடன் எம்பெருமான் கம்பீரமாக வீற்றிருந்து வீதியுலா வலம்வந்து அடியவர்களுக்கு அருள்பாலித்தருளினார்.
Last Updated (Saturday, 15 August 2015 05:26)